*பொறியியல் கல்லூரிகளில் இனி அரியர்ஸ் கிடையாது.... புதிய பாடத்திட்டம் அமல்*
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இந்த கல்வியாண்டு முதல் புதிய பாடத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது. 'அரியர்ஸ் வைக்காதவன் அரைமனிதன்' என்ற கல்லூரி பழமொழிக்கு முடிவு கட்டப் போகிறது அண்ணா பல்கலைக்கழகம்.
தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் 4 ஆண்டுக்கு ஒரு முறை பாடத்திட்டம் மாற்றப்பட வேண்டும். 2013-ம் ஆண்டு பாடத்திட்டம் மாற்றப்பட்டது. இதையடுத்து இந்த கல்வி ஆண்டில் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கல்விக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் சுனில் பாலிபால், தமிழ்நாடு தொழில்நுட்பக்குழு ஆணையர் ராஜேந்திர ரத்னு, அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கணேசன், கிண்டி என்ஜினீயரிங் கல்லூரி டீன் டி.வி.கீதா உள்ளிட்டோர் பங்கேற்ற கூட்டத்தில் அரியல்ஸ் முறை ரத்து குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கல்விக்குழு டீன் டி.வி.கீதா, சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 3 கல்லூரிகளிலும், குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி. கல்லூரியிலும் பாடத்திட்டம் மாற்றப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. அதேபோல் ஒரு துறையை தேர்ந்து எடுத்து படிக்கும் போது அவர் வேறு ஒரு துறையில் கண்டிப்பாக அவரது விருப்பப்படி 2 பாடங்களை தேர்ந்து எடுத்து படிக்க வேண்டும்.
*இந்த ஆண்டு முதல் அமல்*
இந்த கல்வியாண்டில் தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 518 பொறியியல் கல்லூரிகளிலும் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது. புதிய பாடத்திட்டத்தில் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தொழிற்சாலைகளில் பயிற்சி, கம்ப்யூட்டர் அறிவு ஆகியவையும் இடம் பெற்றுள்ளது.
*2 விருப்பப் பாடங்கள் பயில வேண்டும்*
புதிய பாடத்திட்டத்தின்படி ஒரு துறையை தேர்ந்து எடுத்து படிக்கும் மாணவர்கள் மற்றொரு துறையில் குறைந்தது 2 விருப்ப பாடங்களையாவது படிக்க வேண்டும். இது விருப்பத்தின் அடிப்படையில் படிக்கும் முறை என்று அழைக்கப்படுகிறது.
*கட்டாயம் படிக்க வேண்டும்*
இதன்படி மெக்கானிக்கல் பிரிவு படிக்கும் மாணவர்கள் 2 பாடங்களுக்கு பதிலாக கணினி அறிவியல் பாடத்தில் ஏதாவது இரு பாடங்களை எடுத்து படிக்க வேண்டும். இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பி.இ. படிக்கும் போது 3-வது ஆண்டு கடைசியில் மாணவர்கள் 8.5 கிரேடு மதிப்பெண்கள் எடுத்திருந்து, அவர்கள் கடைசி ஆண்டு படிக்க முடியாவிட்டால் 5-வது ஆண்டு கல்லூரிக்கு வந்து 4-வது வருட படிப்பை தொடரலாம்.
*நோ 'அரியர்ஸ்'*
பொறியியல் கல்லூரிகளில் இருக்கும் 'அரியர்ஸ்' முறை தேர்வு இனி கிடையாது. ஒரு மாணவர் பி.இ. முதல் பருவ தேர்வில் ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை என்றால் அவருடைய 'இன்டர்னல்' மதிப்பெண் ரத்து ஆகிவிடும். அவர் மீண்டும் 3வது பருவ தேர்வில் தேர்ச்சி பெறாத முதல் பருவத்திற்கான 'இன்டர்னல்' தேர்வை எழுத வேண்டும். பிறகு அவர் பருவ தேர்வை எழுத வேண்டும்.
*7 ஆண்டுகளுக்குள் எழுத வாய்ப்பு*
அவர் விரும்பினால் தேர்ச்சி பெறாத பாடத்திற்கு உரிய வகுப்பில் உட்கார்ந்து படிக்கலாம். தேர்ச்சி பெறாத பாடத்திற்கு உரிய 'இன்டர்னல்', பருவ தேர்வை 7 ஆண்டுக்குள் எழுதலாம். இதனால் 'அரியர்ஸ்' என்ற வார்த்தை ஒழிக்கப்படுகிறது.
*பொறியியல் படிப்பு*
பொறியியல் படிப்பு படிப்பவர்கள் 4 ஆண்டுகள் படிப்பை முடிக்காமல் அரியர்ஸ் வைத்து 10 ஆண்டுகள் வரை எழுதி வருகின்றனர். ஒவ்வொருமுறையும் வினாத்தாள் தயாரிக்க கடும் சிரமம் ஏற்படுவதாக கூறும் அண்ணா பல்கலைக்கழக நிர்வாகிகள், இதற்கு முடிவு கட்டவே தற்போது புதிய முறையை அமல்படுத்தியுள்ளனர்.
COMMENTS